Breaking News

வட-கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறி மட்டக்களப்பில் ஆரம்பம்.

இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இன,மத,மொழி வேறுபாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனும் நோக்கில் நாட்டின் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறியின் 14வது தொகுதியினருக்கான பயற்சி நெறி அங்குரார்ப்பண நிகழ்வு 30-01-2017 நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திலுள்ள இலங்கை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக இலங்கை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறலந்தை,மஹியங்கனை,கல்லடி ஆகிய கிளைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேவா பத்திரன உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வட-கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 148 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறி மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சியினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறியை கற்பிப்பதற்கு பொலிஸ் பரிசோதகர் ஏ.என்.ரோஜ், பெண் உதவிப் பொலிஸ் திருமதி சந்தியாகுமாரி,பொலிஸ் சார்ஜன்களான நகேந்திரராஜா,சிங்கராஜா,பொலிஸ் உத்தியோகத்தர்களான ஏ.ரீ.எம்.சுபியான்,செல்வநாச்சி ,முன்னாள் பெண் உதவிப் பொலிஸ் பரிசோதகர் திருமதி.லக்ஷ்மி ஆகியோரும் இலங்கை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறிக்கான பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.செல்வராஜாவும்  கடமையாற்றி வருகின்றனர்.

குறித்த கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறியை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ள வடக்கு,கிழக்கு பிரதேச பொலிஸ் நிலையங்கள்,பொலிஸ் விஷேட அதிரடிப் படை முமாம்களில் கடமையாற்றும் 148 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் இலக்கனம்,தமிழ் இலக்கியம்,தமிழ் மொழி பெயர்ப்பு,பேச்சுத் தமிழ்,எழுத்துத் தமிழ் போன்ற தமிழ் பயிற்சி நெறிகள் 5 மாதங்கள் இடம்பெற்று அதில் பரீட்சை நடாத்தி பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறியை பூர்த்தி செய்த சான்றிதழ் வழங்கப்பட்டு அவர்கள் தமிழ் மொழி பேசுகின்ற பிரதேசங்களில் கடமையாற்றுவதற்கு  நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)