Breaking News

சமூக இணக்கப்பாட்டுக்கு நோன்பு மூலம் சிறந்த பயிற்சி

சகோதரத்துவம் சமத்துவ வாழ்வுக்கு புனித நோன்பு மூலம் சிறந்த பயிற்சியும் மனப்பக்குவமும் கிடைப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாளை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நோன்புப் பெருநாளானது முஸ்லிம் மக்கள் இறைபக்தியுடன் கொண்டாடும் மத வைபவமாக இருப்பதைப் போன்றே உலக மக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான மத, சமூக ரீதியிலான பல்வேறு செய்திகளை ஏந்தி வரும் முதன்மையான மத வைபவமாகவும் திகழ்கின்றது. சகோதரத்துவம், சமத்துவம், சகவாழ்வு போன்ற உயர்ந்த குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் மக்கள் ஒரு மாதம் பூராவும் நோன்பு நோற்றார்கள்.

நோன்பு என்பது உணவின் மீதான ஆசை, தேவை என்பவற்றை அடக்கிக் கொண்டு பசியில் இருப்பது மட்டுமல்ல. நோன்பு நோற்பதன் மூலம் விருத்தி செய்துகொள்ளும் உடல், உள ரீதியான அமைதி, அடக்கம், ஒழுக்கம் என்பன பயன்மிக்க சிறந்த சமூக மொன்றினைத் தோற்றுவிப்பதற்கு உன்னத பங்களிப்பை வழங்குகின்றது.

தமது சகோதர மக்களின் துன்ப துயரங்கள், தேவைகளை உணர்ந்து உதவி தேவைப்படும் மக்கள் மீது விசேட கவனத்தைச் செலுத்தி தியாக உணர்வுடன் அவர்களுக்கு வாரி வழங்கி சகோதரத்துவம், சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு ரமழான் நோன்பு காலம் விசேடமாக துணை புரிகின்றது.

முஸ்லிம் மக்கள் ஒரு மாதம் பூராவும் நோன்பு நோற்றதன் பின்னர் இம்முறை நோன்புப் பெருநாளை பயம், சந்தேகம் இன்றிய சுதந்திரமான சூழலில் கொண்டாடுகின்றார்கள். அது அனைவரது மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேக மில்லை.

இலங்கை வாழ் சகோதர முஸ்லிம் மக்களை போன்றே உலகவாழ் சகோதர முஸ்லிம் மக்களுக்கும் சமாதானம், நல்லிணக்கமிக்க மகிழ்ச்சிகரமான நோன்புப் பெருநாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதுடன் எனது உளங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நமது நிருபர்