ஓட்டமாவடியில் துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) நண்பகல் 12.15 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (37 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவ்விடத்தில் மறைந்து நின்ற இனந்தெரியாத இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த துப்பாக்கியினால் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிதாரியை கைது செய்யும் பொருட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர். இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.