Breaking News

நரேன் - சூரி நடிப்பில் கத்துக்குட்டி இது ஒரு காமெடி கச்சேரி!

பிரபல பத்திரிகையில் செய்தியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய இரா சரவணன் இயக்குநராக அறிமுகமாகிறார், கத்துக்குட்டி படம் மூலம்.

நரேன் - சூரி நடிப்பில் முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள கத்துக்குட்டி வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகவிருக்கிறது. சரவணனைச் சந்தித்தோம்... "நான் தஞ்சாவூர்க்காரன். எங்க மண்ணின் வாழ்க்கையை காமெடி கலாட்டாவாகச் சொல்லியிருக்கேன் கத்துக்குட்டி படத்துல. எங்க ஊர்ப்பக்கம் நல்லா படிச்சவங்க பெரிய நகரங்கள் இல்லன்னா வெளிநாட்டுக்குப் போயிடுவாங்க. ஓரளவு படிச்சவங்க திருப்பூர் பக்கம் போயிடுவாங்க. ஆனால் சரியா படிக்காத பசங்க மட்டும் எங்கயும் போகாம ஊரே கதின்னு கிடப்பாங்க. திருவிழா, கூட்டம், பண்டிகை எதுன்னாலும் ஊர்ல இவங்கதான் கலக்குவாங்க. இவங்கதான் விவசாயத்தை இன்னும் காப்பாத்திக்கிட்டிருக்கிறவங்க. அந்த மாதிரி கலாட்டா இளைஞர்களின் கதைதான் கத்துக்குட்டி," கொஞ்சம் களவாணி சாயல் தெரியுதே என்றோம். உடனே அவர், "அப்படித்தான் தெரியும். ஆனா.. நிச்சயம் களவாணி சாயம் இம்மியளவுக்குக் கூட இல்லாத மாதிரி படத்தை உருவாக்கியிருக்கேன். களவாணி எனக்குப் பிடிச்ச பெஸ்ட் படங்கள்ல ஒண்ணு. ஆனா அதுக்காக அதே பாணில நான் படம் தர மாட்டேன். இந்தப் படத்துல காமெடியோட, விவசாயிகளின் வலி, வேதனை என்னன்னும் சொல்லியிருக்கேன்," என்றார்.

படம் பார்த்த சென்சார் குழுவினர் யு சான்று வழங்கியதோடு, தஞ்சை கிராமம் ஒன்றில் வாழ்ந்த மாதிரி இருந்தது என்றார்களாம். அதேபோல தமிழக அரசின் வரிவிலக்குக் குழு, படம் பார்த்த இரண்டாவது நாளே வரிவிலக்கு அளித்துவிட்டார்களாம். அருள் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படம் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது.