Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மிக விரைவில் தீர்மானிக்கப்படும்.

விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 தமிழ் அரசியல் கைதிகளை இவ்வார இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார மறுத்துள்ளார்.

குறித்த தமிழ் சிறைகைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நீதிமன்றம், நீதியமைச்சு, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸார் ஆகியோர்  தீர்மானிக்க வேண்டும். தற்போது சிறைகைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. குறித்த சிறைகைதிகள் தொடர்பில் பூரணமான தகவல்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றன.

தகவல்கள்  கேரிக்கப்பட்ட பின்னர், அவற்றை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கைதிகளின் விடுதலை தொடர்பில் இவர்களே தீர்மானிப்பார்கள் என்றும் புஷ்பகுமார மேலும் கூறினார். குறித்த தமிழ் சிறைகைதிகள் தொடர்பில் இவ்வார இறுதியில் விடுதலை செய்ய நடவடிக்;கை எடுக்கப்பட்டுள்ளதாக சில செய்தி இணையத்தளங்கள் வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோது, அவர் இவ்வாறு கூறினார். தம்மை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, நாடளாவிய ரீதியில் தமிழ் அரசியல் கைதிகள், கடந்த வாரம் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இவர்கள் குறித்து எதிர்வரும் நவம்பர் மாத முதற்பகுதிக்குள் தீர்மானமெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதியையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இதேவேளை, பிரதமர், சட்டமா அதிபர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கிடையில் திங்கட்கிழமை (19) இரவு இடம்பெற்ற சந்திப்பின்போது, கைதிகளில் விடுதலை தொடர்பில் பேசப்பட்டதாகவும், குறித்த கைதிகள் தொடர்பான விவரங்களை சேகரித்த பின்னர், அவர்களின் விடுதலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.