Breaking News

M.S.W. அமைப்பின் தமிழ்,முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

சமூக நலன் பேணும் அமைப்பின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒன்றான வறிய மற்றும் திறமையான தமிழ்,முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வொன்று அண்மையில் காத்தான்குடியை அண்டியுள்ள ஐந்து பாடசாலைகளில் நடைபெற்றது.

'வறுமை கல்விக்கு தடையல்ல' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பூநொச்சிமுனை அல் இக்ரஃ வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலயம், ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயம், பாலமுனை அலிகார் வித்தியாலயம் மற்றும் செல்வாநகர் சிவா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பயனடைத்தனர். சமூக நலன் பேணும் அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் தாமாகவே முன்வந்த சில தனவந்தர்களின் நிதி உதவியில் இருந்து ஒவ்வொன்றும் தலா 1000 ரூபாய். பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாடசாலை அதிபர்கள் மூலமாக பெறப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டிலுக்கு அமைவாக
தரம் 1 முதல் தரம் 11 வரையிலான 232 தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கு இக் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வுகளில் பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் எம்.ஏ.இம்தியாஸ் அமைப்பின் உப தலைவர் டாக்டர் அஹமட் சியாம் உட்பட சமூக நலன் பேணும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சமூக நலன் பேணும் அமைப்பானது காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் மக்களின் சுகாதார முன்னேற்றம், கல்வி அபிவிருத்தி மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை என்பவற்றினை நோக்காகக் கொண்டு சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-