2ம் தகுதி சுற்றில் குஜராத்துடன் மோதப்போவது யார்?
ஐ.பி.எல். போட்டியின் ‘பிளேஆப்’ சுற்று நேற்று தொடங்கியது. முதலில் நடந்த ‘குவாலியையர் 1’ ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது.
இன்று 2–வது ஆட்டமான எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) நடக்கிறது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரை சர்ஸ் ஐதராபாத்–காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் லயன்சுடன் மோதும். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.
‘லீக்’ போட்டியில் இரு அணிகளுமே 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்றன. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தாவிட ஐதராபாத் முன்னணி பெற்று இருந்தது.
அந்த அணியின் கேப்டன் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 7 அரை சதத்துடன் 658 ரன்கள் குவித்துள்ளார். இது தவிர தவான், வில்லியம்சன், யுவராஜ்சிங், ஹென்ரிக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளார்.
ஐதராபாத் அணி இந்த சீசனில் 2 முறையும் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது. இதற்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்து ‘குவாலிபையர் 2’ ஆட்டத்திலும் நுழையும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
2 முறை சாம்பியனான (2012, 2014) கொல்கத்தா அணி 4–வது தடவையாக ‘பிளேஆப்’ சுற்றில் ஆடுகிறது. அந்த அணியில் கேப்டன் காம்பீர், உத்தப்பா, யூசுப்பதான், மனிஷ் பாண்டே, சுனில்நரீன், மோர்னே மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இதில் காம்பீர் 5 அரை சதத்துடன் 473 ரன்னும், உத்தப்பா 383 ரன்னும், யூகப்பதான் 359 ரன்னும் எடுத்துள்ளனர். காயத்தில் இருந்து குணமடைந்ததால் அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத்தை 2 முறை வீழ்த்தி இருந்ததால் கொல்கத்தா அணி மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் மோதுவது 9–வது ஆட்டமாகும். இதுவரை நடந்த போட்டியில் கொல்கத்தா 6 ஆட்டத்திலும் ஐதராபாத் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.