Breaking News

தமிழ் - முஸ்லிம் உறவினை மேலும் வலுவூட்ட வேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகமான தமிழ் - முஸ்லிம் மக்களிடையேயான உறவு மேலும் வலுவூட்டப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அதற்கான நடவடிக்கைகளை அரசியல்வதிகள், மதத்தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களிடையே விரிசல் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று சிங்கள தேசியவாத அமைப்புக்கள் திட்டமிட்டு செயற்பபட்டு வருவதாகவும், அதனை முறியடிக்க நாம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான நிலையை வடகிழக்கு மக்களும் அனுபவிக்கின்றனர். எனினும், நிலையான சமாதானம் - நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு – ஒற்றுமை மேலும் அதிகரிக்க வேண்டும். 

ஆனால், கிழக்கு மாகாணத்தில் அண்மைக்கால போக்குகள் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர். ஆகவே, இதனை சரிசெய்ய தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகள், இயக்கங்கள் , அமைப்புக்கள், மத ஸ்தலங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரு சமூகங்களும் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் பல உள்ளன. மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு, இராணுவத் தலையீடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் நாம் ஒன்றினைந்து செயலாற்ற வேண்டும்.- எனத்தெரிவித்தார்.