Breaking News

சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமானதும் மிக ஆழமானதுமான சுரங்க ரெயில் பாதை இன்று திறக்கப்படுகிறது!

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரெயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சுரங்கப்பாதைக்கான தோராயமான வடிவமைப்பு முதன் முதலில் 1947-ம் ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்டு கார்னர் வெளியிட்டார்.

காட்தர்டு பேஸ் சுரங்கம் என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரெயில் பாதையின் நீளம் 57 km, ஆழம் 2.3km ஆகும். 

இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள செய்கன் என்ற சுரங்க வழி ரெயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரெயில் பாதையாக இருந்தது

ஆல்ப்ஸ் மலைத் தொடரில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஸூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறையும்.

2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரெயில் பாதை சுவிஸின் உறி மாகாணத்தில் உள்ள எர்ஸ்ட்பெல்டு என்ற பகுதியில் தொடங்கி, டிசினோ மாகாணத்தில் உள்ள போடியோ என்ற பகுதியில் நிறைவடைகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.