63 ஆண்டுகள் தம்பதியராய் வாழ்ந்து மரணத்தின்போதும் பிரியாத அமெரிக்க ஜோடி
அன்பான ஜோடியை மரணத்திலும் பிரிக்க முடியாது என்ற வாசகத்தை, எத்தனையோ முறை கேட்டிருப்போம். அந்த வாசனத்தின் படி அமெரிக்காவில் 63 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த ஜோடி, மரணத்திலும் ஜோடி சேர்ந்தது.
அமெரிக்காவில் ஜூனெட்டே என்ற பெண்மணி தனது 87-வது வயதில் குடும்பத்தினருடன் சேர்ந்து பைபிள் படித்துக் கொண்டிருந்த போது அவரது உயிர் பிரிந்தது.
அந்த பெண்மணியின் மகன்களில் ஒருவர் 86 வயதான தனது தந்தையிடம், “அம்மா சொர்க்கத்திற்கு சென்று விட்டார்” என்று கூறினார்.
அதுவரை வாழ்வதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஜூனெட்டேவின் அருமை கணவர் ஹென்றி டி லாங், தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டார். மனைவி இறந்த இருபது நிமிடம் கழித்து கணவரும் உயிர் நீத்தார்.
தம்பதிகளாக ஹென்றி மற்றும் ஜூனெட்டே டி லாங் இருவரும் கடந்த ஜூலை 31-ம் தேதி அமெரிக்காவின் தெற்கு டகோடா பகுதியில் உள்ள நர்சிங் இல்லத்தில் இறந்தனர்.
இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக அந்த நர்சிங் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இருவரும் திருமணம் முடிந்து 63 வருடங்கள் ஒன்றாக கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தனர். தற்போது மரணத்திலும் இருவரும் ஒன்றாக கைகோர்த்து ஒரே அறையில் சில நிமிட இடைவெளியில் சேர்ந்து கொண்டனர்.