Breaking News

கிழக்கில் சட்ட ஒழுங்குகளை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவும் !!

கிழக்கு மாகாணத்தில் சட்ட ஒழுங்குகளைச் சீர் செய்து மாகாணத்தில் சமாதானம், சமூக ஒற்றுமை, மனிதநேயம் உருவாக வேண்டும் இதற்காக அனைத்துத் துறையினரும் தங்களுடைய பணியைச் சரியாகச் செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல அரச உயர் அதிகாரிகள் , ஏனைய அதிகாரிகளையும் அழைத்து மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க தெரிவித்துள்ளார். எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன அவை எங்கிருந்து ஆரம்பமாகிறது. அவற்றுக்கு யார், யார் ஆதரவளிக்கிறார்கள், அதனைத் தடைசெய்ய என்ன அநுகுமுறைகளைக் கையாளவேண்டும் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டு கருத்துக்கள் கூறப்பட்டன.

குறிப்பிட்ட கூட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி போன்ற ஊர்களில் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனைகளும் வியாபாரமும் இடம்பெறுவதாகவும், ஆயுதக் குழுக்கள் மற்றும் அசம்பாவிதக் குழுக்கல் உலாவுவதாகவும், தகவல்கள் தெரிவிக்கப்பட்டதுடன், சட்டவிரோதமாக ஆற்று மண், ஊத்தை மண் அகழப்படுவதாகவும். காடுகள் அழிக்கப்படுவதாகவும், அரச காணிகள் அபகரிப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே இப்படியான முறைப்பாடுகள், குற்றச்சாட்டுக்கள், அசம்பாவிதங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த வேண்டும் இதற்காக பொலிஸ் திணைக்களம் பூரண ஒத்துளைப்பு நல்கி களத்தில் இறங்கி செயற்படவேண்டும். அவர்களுக்கு அதிகாரிகள் பொதுமக்கள் உதவிகள் புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளும் இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் எந்த குற்றவாளிகளுக்கும் சலுகைகள் வழங்கக் கூடாது. இப்படியான சட்டவிரோத நடவடிக்கைகள் இனமுறுகள்களத் தோற்றுவிக்கவும் காரணமாக அமைந்து விடும். எனவே அவைகளைத் தடுக்கும் நடவடிக்களை உடனடியாக அமுலுக்கு கொண்டு வர செயற்படுங்கள் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.சிறிநேசன், யோகேஸ்வரன்,  அரசாங்க அதிபர் பி.எஸ். எம்.சார்ஸ், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டணர்.