Breaking News

ஐ.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் பாலியல் அடிமையாகயிருந்த இளம்பெண் தற்போது ஐ.நா.வின் நல்லெண்ண தூதர்.

கடந்த 2014ம் ஆண்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் நாட்டில் உள்ள ஒரு பகுதியை கைப்பற்றி, அங்குள்ள இராணுவத்திற்கெதிராக தாக்குதல் நடத்தினர். அப்போது நதியாவின் கண்ணெதிரே அவரின் சகோதரர், தாய் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் 19 வயதான நதியாவை தங்களுடன் கூட்டிச்சென்று அவரை பாலியல் அடிமையாக வைத்திருந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க நதியா, பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், ஒருமுறை 6 பேர் ஒன்று சேர்ந்து நதியாவை பலாத்காரம் செய்ததில் தனது சுயநினைவை அவர் இழந்தார். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து ஜெர்மனி நாட்டிற்கு தப்பி சென்ற நதியாவுக்கு ஜெர்மனி நாட்டில் அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைத்தது.

இன்று ஐ.நா.வின் மனித கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக நதியா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது வலைதளத்தில் நதியா ”இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு புதிய வாழ்வை அமைத்துத் தருவது மற்றும் மனித கடத்தலை தடுப்பதே எனது லட்சியம்” என்று  தெரிவித்துள்ளார்.