மட்டக்களப்பு சித்தாண்டிபகுதியில் காட்டு யானை தாக்கிய சிறுமி பலி !!!
மட்டக்களப்பு சித்தாண்டியின் சந்தனமடு ஆறு எனும் பகுதியில், நேற்று(03) மாலை, காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 11வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ்பிரிவு தெரிவிக்கின்றது.
இத்தாக்குதலில் மரணமடைந்த மாவடிவெம்பு கிராமத்தை வசிப்பிடமாகக்கொண்ட ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) ஆகியோர் அவர்களது மாமாவுடன், ஈரக்குளம் கிராமத்துக்கு சென்று சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அருகே உள்ள வயல்பாதை வழியாக மாவடிவெம்பு கிராமத்தை நோக்கிச் செல்லும் போது பாதைக்கு குறுக்கான வந்த காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் இருசகோதரிகழும் காயமடைந்த நிலையில், மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஷர்மிலா என்ற 11 வயதுடைய சிறுமியை, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது தங்கை சிறு காயங்களுடன் தொடர்ந்தும் மாவடிவெம்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரெனவும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்தது வருகின்றனர்.