Breaking News

கிழக்கில் முதற்தடவையாக விழிப்புலனற்றோரினால் நடாத்தப்படும் கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையம் திறப்பு-படங்கள்.

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக பாடும் கரங்கள் எனும் பெயரில் விழிப்புலனற்றோரினால் நடாத்தப்படும் கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையம் 27-10-2016 இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு அரசடி சந்தி பார் வீதியில் அரசடி பொது நூலகத்திற்கு மேல்மாடியில் திறந்து வைக்கப்பட்டது.

கனேடிய நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட மேற்படி கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையத்தை இலங்கைக்கான கனேடிய நாட்டு உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் Shelley Whiting    உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் கிழக்கு மாகாண அணித்தலைவர் எம்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிலைய திறப்பு விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார்,உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பி.செல்வநாதன்,மட்டக்களப்பு கல்வி வலய விஷேட கல்விப் பிரிவுக்கான பணிப்பாளர் பி.தயானந்தா,அரசடி சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் திருமதி.பி.பார்தீபன் உட்பட கிழக்கு சுற்றுலாத்துறை ஒன்றியம் சர்வதேச நிறுவனங்கள்,கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிலையத்தை அமைப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபை,உதயம் விழிப்புலனற்றோர் சங்கம்,கல்குடா,பாசிக்குடா சுற்றுலாத்துறை ஒன்றியம் போன்றவை பங்காளி நிறுவனங்களாக உதவி வழங்கியிருந்தது.

இங்கு திறந்து வைக்கப்பட்ட குறித்த கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையத்தில் கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் புலமைப் பரிசு வழங்கப்பட்ட ஆண்,பெண் அடங்களாக 15 விழிப்புலனற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 4 மாதங்கள் கைமுறை சிகிச்சை பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்னர் சுற்றுலா பிரயாணிகள்,பொது மக்கள் ஆகியோருக்கு இச் சிகிச்சை நிலையத்தில் கைமுறை சிகிச்சை வழங்கப்படவுள்ளது.இதன் மூலம் விழிப்புலனற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்வதற்கும்,வருமானத்தை ஈட்டுவற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

அத்தோடு குறித்த கைமுறை சிகிச்சை நிலையத்தில் ஆண்கள் ஆண்களுக்கு பெண்கள்,பெண்களுக்கு மாத்திரம் கைமுறை சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)