Breaking News

ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி பொழுதுபோக்கும் கிளப்பாக மாறிவிட்டது !!!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். அந்த வகையில் இப்போது அவர் ஐ.நா. சபையை சாடி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில், “ஐ.நா. சபை மிகப்பெரிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. ஆனால் இப்போது அது மக்கள் ஒன்றாகக்கூடி, பேசி, நன்றாக பொழுதுபோக்குகிற கிளப் போல மாறி விட்டது” என கூறி இருக்கிறார்.

கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதிகளில், இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் மலேசியா, நியூசிலாந்து, செனகல், வெனிசுலா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து தீர்மானம் கொண்டு வந்தன. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்து, ஓட்டெடுப்பின்போது அமெரிக்கா தனது மறுப்பு ஓட்டுரிமையை பயன்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினார். ஆனால் அதை ஒபாமா அரசு நிராகரித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிரான அந்த தீர்மானம் நிறைவேறியது.

தனது விருப்பம் நிறைவேறாத நிலையில்தான் இப்போது ஐ.நா. சபையை டிரம்ப் சாடி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.