Breaking News

கருங்கடலில் ரஷ்ய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு !!

வரும் புத்தாண்டு தினத்தையொட்டி சிரியாவில் முகாமிட்டுள்ள தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்காக கேளிக்கை மற்றும் இசை நிகழ்ச்சியை நடத்த ரஷியா முடிவு செய்தது.

அதன்படி, டி.யு–154 ரக ராணுவ விமானம் நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் இசைக்குழுவினர், ஊடக நிருபர்கள் 84 பேரும் விமானிகள் சிப்பந்திகள் 8 பேரும் என மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.

ஆனால் விமானம் ரேடார் கண்காணிப்பு திரையில் இருந்து மறைந்தது, மாயமானது. நூற்றுக்கணக்கான ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் 27 கப்பல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த விமானத்தின் சிதைவுகள் சோச்சி நகர கடலோர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. சோச்சி நகர கடலோரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் என 92 பேரும் பலியாகி இருக்க வேண்டும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மாஸ்கோவில் இருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. 

இந்த விமான விபத்துக்கு பயங்கரவாத தாக்குதலோ, மோசமான வானிலையோ காரணமாக இருக்காது என்றும், விமானத்தின் தொழில் நுட்பக்கோளாறு அல்லது விமானியின் தவறுதான் காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கருங்கடல் பகுதியில் கடந்த இருநாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பத்துக்கும் அதிகமான உடல்களை இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விபத்துக்கான மூலக்காரணம் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக விமானத்தில் இருந்த கருப்பு பெட்டிகளை தேடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் கருப்பு பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாஸ்கோவில்  தகவல்கள் தெரிவிக்கின்றன.