Breaking News

உங்கள் செல்லம் விரைவில் பேச வேண்டுமா?

மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை விரைவில் பேச வைக்க முடியும்.

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள்.

இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள். குழந்தைகள் பேசுவது அவர்கள் வளரும் மற்றும் வெளிப்படுத்தப்படும் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப மாறுபாடுகின்றது.

குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை நாம் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரிடம் அல்லது பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதன் காரணங்களை கண்டறிய வேண்டியுள்ளது. மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை பேச வைக்க முடியும். உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும். இதுவே நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யாமல் அவர்களை பேச வைத்திட சிறந்த வழியாகும். மற்ற குழந்தைகளுடனும் விளையாட விடும் போது பேச்சு தானாக நிச்சயம் வரும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் உங்களுடைய முயற்சிகள் இல்லாமலேயே அவர்கள் பேசத் தொடங்குவார்கள்.

குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு என்ன புரியப் போகின்றது என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நீங்கள் சும்மாவாவது அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கத் தொடங்குவார்கள்.

அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற அழைக்கும் சொற்களையும் எப்போதும் கூறி கொண்டு அவர்களையும் சொல்ல வையுங்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்கு விரைவாக புரிந்து விடும். இதுவே உங்கள் குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.

ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள். நல்ல சங்கீதம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை கேட்க விடுங்கள். இதை அவர்கள் கேட்டு திரும்பச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் கேட்டதை ஒரு நாள் நிச்சயம் சொல்லுவார்கள்.

வெறும் பேச்சு மட்டும் போதாது. அவர்களையும் திருப்பிச் சொல்ல சொல்லுங்கள். சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள். அது குழந்தையின் பெயராகவும் கூட இருக்கலாம், அந்த பெயரை கொண்டு இரவு நேர கதைகளில் ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம். இது அவர்களுக்கு நிச்சயம் புரியும். இதை எல்லாம் கேட்கும் குழந்தைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள்.