சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து சங்கக்காரா ஓய்வுபெற முடிவு
கொழும்பு, இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியுடன் இலங்கை விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சங்கக்கார இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாகவும், இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆகியவற்றில் பங்கேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12,203 டெஸ்ட் ரன்களை 58.66 என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ள சங்கக்காரா, 38 சதங்கள் எடுத்துள்ளார். அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த இலங்கை வீரர் சங்கக்காரா என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை முடிந்தவுடனேயே அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிப்பதாக இருந்தா சங்கக்காரா, ஆனால் ஓய்வு முடிவை தள்ளி வைக்குமாறு அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதால் ஆட்டத்தை தொடர்ந்தார்.



