"நான் விலகியமை தொடர்பில் எந்தவொரு நபரும் பொறப்புக் கூறவேண்டிய தேவையில்லை. இது நான் சுயமாக எடுத்த சொந்தத் தீர்மானமாகும்"
அரசியலில் இருந்து ஓய்வு – நிர்மல கொத்தலாவல அறிவிப்பு
அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிதியமைச்சர் நிர்மல கொத்தலாவல நேற்றைய தினம் (18) அறிவித்தார் களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது தீர்மானத்திற்கான காரணங்களை அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் தற்போது நிலவும் முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் பொதுவான அரசியல்பாதையில் பயணிக்க முடியாது என்ற காரணத்தினானாலேயே நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்கின்றேன் எனத் தெரிவித்த நிர்மல கொத்தலாவல தற்பேர்து அரசியல் நடவடிக்கைகளை விட வெறுப்பு, கோபம் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவே தவிர அரசியல் கருத்து முரண்பாடுகளை முன்னெடுக்கும் அரசியல் பின்புலம் இந்த நாட்டில் காணப்படவில்லை. நாட்டிலுள்ள மக்களுக்கு நலன்களைப் பெற்றுக்கொடுப்பதைப் புறக்கணித்து அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆதனால் இந்த அரசியல் சூழ்நிலையில் இருந்து விலகி சாதாரண குடிமகனாக வாழ தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நான் விலகியமை தொடர்பில் எந்தவொரு நபரும் பொறப்புக் கூறவேண்டிய தேவையில்லை. இது நான் சுயமாக எடுத்த சொந்தத் தீர்மானமாகும்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. முடியுமானால் நிரூபித்துக் காட்டுங்கள் என்பதே அதற்காகக் கூறப்படும் பிரபலமான வார்த்தையாகும். இதனையே இரு தரப்பினரும் முன்வைக்கின்றனர். எனினும் அவர்கள் முன்னெடுத்த விடயங்கள் தொடர்பில் அவர்களது மனசாட்சிக்குத் தெரியும். அதனால் இந்த நாட்டு மக்களின் நிதி மற்றும் சொத்து முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பின், முறையற்ற வகையில் சம்பாதிக்கப்பட்டிருப்பின் மனசாட்சிக்கு அது தெரியும். நாம் பொதுமக்களின் நிதியை முறையற்ற வகையில் சம்பாதித்திருந்தால் நாம் நன்றாக வாழ முடியாது நம் பிள்ளைகளும் நிம்மதியாக வாழ முடியாது எனவும் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.
நமது நிருபர்



