Breaking News

ஐந்தாவது முறையாக வடகொரியா அணுகுண்டு பரிசோதனை; அமெரிக்கா அச்சம்!!

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடாக கருதப்படுகின்றது வடகொரியா. ஆனாலும், அந்த நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்து வருகின்றது. இருப்பினும், கடந்த 2006ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து செய்து வருகின்றது.

அந்தநாடு, தொடர்ந்து மூன்று முறை அணுகுண்டு பரிசோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி, அதிரடியாக அணுகுண்டைவிட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து பரிசோதனை செய்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.

அதன்படி வடகொரியா இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

அவ்வகையில், புங்யே-ரி பகுதியில் இன்று காலை சுமார் 6 மணியளவில் வடகொரியா இன்று சக்திவாய்ந்த அணு குண்டை மீண்டும் பரிசோதித்துள்ளதாக தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புவிசார் கண்காணிப்பு முகாம்கள் கூறியுள்ளன.

இந்த அணுகுண்டு பரிசோதனையின் விளைவாக வடகொரியாவின் பல பகுதிகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தாக்கத்தை வைத்து கணக்கிடுகையில் 20 முதல் 30 மெட்ரிக் டன் சக்தி கொண்ட அணுகுண்டு இன்று பரிசோதிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஆய்வு நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது.