Breaking News

வாகரை பிரதேசத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ...!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் சுனாமியினால் அதிகளவு பாதிக்கப்பட்ட வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் அகதிகளாக வாழ்கின்ற மக்களை உடனடியாக மீள்குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். 

வாகரை பிரதேசத்தில் உள்ள மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,  இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை மாலை வாகரை பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.

அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ரகுலநாயகி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டது. 

இதன்போது,  பிரதேச செயலாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பகுதிகளில் இதுவரை மீள்குடியேற்றப்படாத மக்களை உடனடியாக மீள்குடியேற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். 

இதற்குத் தேவையான நிதியினை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்குவதற்குவதாகவும் அவர் உறுதியளித்தார். 
இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 17ஆம் திகதி காணி ஏலம் நடத்தப்பட்டு மீள்குடியேற்றப்பாடத மக்களுக்கு காணிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன்,  மீள்குடியேற்றபடவுள்ள மேலதிக மக்களும் இணங்கானப்படவுள்ளனர். 

அதனை அடுத்து எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய நான்கு பகுதிகள் மீள்குடியேற்றுவதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள 47 குடும்பங்களுடன் எதிர்வரும் 17ஆம் திகதி தெரிவு செய்யப்படும் குடும்பங்களும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ளனர். பின்னர், அடுத்த வருட ஆரம்பத்தில் நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது. 

தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாவுடன், கழிப்பறை வசதிகளை செய்து கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, மீள்குடியேற்றப்பட்ட மக்களது வீடுகள் பெரிதும் சேதமாகியுள்ளதாகவும் அவற்றை திருத்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் நிதி ஒதுக்குமாறும் பிரதேச செயலாளர் ரகுலனாயகி முன்வைத்த கோரிக்கையை ஏற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், 

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிளவு வீடுகள் கட்டுவதற்கான தேவைப்பாடு இல்லாத காரணத்தினால், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை திருத்துவதற்கு அமைச்சினால் நடவடிக்கை எடுப்பதாகவும், வீடுகளின் சேதத்தின்  தரத்துக்கு ஏற்ப ஒரு குடும்பத்துக்கு 2 தொடக்கம் 3 இலட்சம் ரூபா வரை திருத்த வேலைகளுக்காக நிதி ஒதுக்குவதாகவும் வாக்குறுதி வழங்கினார். 

அத்துடன், வாகரை பகுதியில் பெண்களது தலைமையில் இயங்கும் குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு முன்வந்துள்ளது. எனவே, இப்பகுதியில் தொழிற்சாலைகள் நிறுவி வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும், அதற்குத் தேவையான நிதியை வழங்க தயாராகவுள்ளதாகவும் பிரதேச செயலாளரிடம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.