மட்டக்களப்பு ஊறணிப்பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 1.00மணியளவில் ஊறணி சந்திப்பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது கன்டர் வாகனம் மோதியதன் காரணமாக இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.
பொலநறுவை பகுதியில் மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த கன்டர் ரக வாகனமே மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தின்போது இருதயபுரத்தை சேர்ந்த என்.மயூரன்(52வயது) அவரது மகனான ம.அபிரஞ்சிதன் (12வயது)மற்றும் சகோதரியின் மகனான எஸ்.தர்சானந்த்(12வயது)ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தினை ஏற்படுத்திய சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளடன் விபத்து தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதன்போது குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதுடன் அங்கு ஒன்றுகூடிய மக்கள் முறையான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும், அப்போதே வாகனத்தை கொண்டுசெல்ல விடுவோம் என வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்வதை தடுத்தனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி விபத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் என வழங்கிய உறுதிமொழியையடுத்து வாகனத்தை கொண்டுசெல்ல அனுமதித்தனர்.
குறித்த கன்டர் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியே வாகனத்தை செலுத்திவந்ததுடன் வாகனமும் முறையான அனுமதியின்றி செலுத்தி வரப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் ஸ்டீபன் .ராஜன் தெரிவித்தார்.
வாகனம் செலுத்தும்போது வருடாந்த வாகன பதிவு சான்றிதழ் வாகனத்தின் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளபோதிலும் குறித்த வாகனத்தில் அந்த சான்றிதழ் காட்சிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்